துருக்கி நாட்டு வெங்காயம் இந்தியா வருகிறது!!

11,000 டன் வெங்காயத்தை துருக்கியிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.


இந்தியாவில் பொருளாதார மந்தநிலைக்கு ஈடாகப் பேசப்பட்டுவரும் மற்றுமொரு பிரச்சினை வெங்காய விலையேற்றம்.


வெங்காய உற்பத்திப் பகுதிகளில் பெய்த கனமழையால் இந்த ஆண்டில் சந்தை வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.


வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிநாட்டிலிருந்து போதுமான வெங்காயத்தை இறக்குமதி செய்து சப்ளை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளையும் அரசு தளர்த்தியது.


முதற்கட்டமாக, எகிப்து நாட்டிலிருந்து 6,090 டன் அளவிலான வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டது. மத்திய அரசின் கீழ் செயல்படும் எம்.எம்.டி.சி. நிறுவனம் இந்த இறக்குமதிப் பணியில் ஈடுபட்டுள்ளது. டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இந்த ஆர்டர் இந்தியா வந்தடையும்.